டுவிட்டர் சமூக ஊடகத்தைக் கடுமையாகச் சாடி வலியுறுத்திய நாடாளுமன்றக் குழு
புதுடில்லி: டுவிட்டர் நிறுவனத்தை தங்கள் நாட்டின் சட்டங்களுக்கு உட்படுமாறு அதன் இந்திய நிர்வாகிகளிடம் இந்திய நாடாளு மன்றக்குழு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் அந்நாட்டுச் சட்டங்களே ஆக உயர்வானவை என்றும் அக்குழு கூறியது.
தகவல் தொழில்நுட்பம் தொடர்பிலான இந்திய நாடாளுமன்றக் குழு நேற்று முன்தினம் டுவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகியை அழைத்து சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரித்தது.
இந்தியாவில் டுவிட்டர் நிறுவனத்தின் அமைப்புமுறை, இப்போதையச் சட்டங்களை நிறுவனம் மதிக்கிறதா என்பவை குறித்து கேள்வி எழுப்பினர். டுவிட்டர் இந்தியா ஏன் இன்னும் அந்நாட்டுச் சட்டங்களுக்கு நிறுவனம் உடன்படுவதை உறுதி செய்யும் கீழ்ப்படிதல் துறைக்கு தலைமை நிர்வாகியை நியமிக்கவில்லை, பிரச்சினைகளை, குறிப்பாக சமய ரீதியான வெறுப்புணர்வை உண்டாக்கக்கூடிய உள்ளடக்கம் குறித்து நிறுவனத்தின் கொள்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
கட்சிவாரியாக இல்லாத அந்தக் குழுவின் விசாரணைக்கு காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஷி தரூர் தலைமை வகித்தார். பாரதிய ஜனதாவின் நிஷிகாந்த் டுபேய் போன்றவர்கள் இடம் வகித்தனர். டுவிட்டர் நிறுவனத்தின் சார்பில் இந்தியாவுக்கான அதன் பொதுக்கொள்கை நிர்வாகி ஷகுப்தா காம்ரான், நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் ஆயுஷி கபூர் இருவரும் கலந்துகொண்டனர்.
இந்தியாவில் சட்டங்கள் முக்கியம் என்ற போதும் தங்கள் நிறுவன விதிமுறைகளும் முக்கிய மானவை என்று அவர்கள் கூறினர்.
தங்கள் கேள்விகளுக்கு டுவிட்டர் நிர்வாகிகள் மடைமாற்று விதமாகவும் மேம்போக்காகவும் பதில் அளித்ததாக நாடாளுமன்ற குழுவினர் கடிந்துகொண்டதாக தகவல்கள் தெரிவித்தன.
கடந்த மே மாத இறுதியில் நடப்புக்கு வந்த இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை, டுவிட்டர் தவிர்த்த யூடியூப், ஃபேஸ்புக் போன்ற மற்ற முக்கிய சமூக ஊடகங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் டுவிட்டர் அந்த விதிமுறைகளுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகளை மாற்றவில்லை.
அதன் பின்னர் டுவிட்டர் நிறுவனத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இந்திய துணை அதிபர் வெங்கையா நாயுடு, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் உள்ளிட்டவர்களின் கணக்குகளுக்கு அளிக்கப்பட்ட நீலநிற டிக்குகளை சில மணிநேரத்துக்கு நீக்கியது டுவிட்டர். கணக்குகள் உண்மையானவை என்று உறுதி செய்யப்பட்டதை அந்த டிக்குகள் காட்டுகின்றன.
கடந்த 5ஆம் தேதி காஸியாபாத்தில் உள்ள முஸ்லிம் நபர் தன்னைப் போலிசார் அடித்ததாகக் குற்றஞ்சாட்டிய காணொளி டுவிட்டரில் பகிரப்பட்டது. ஆனால் அது பொய்த் தகவல் என உத்திரப் பிரதேசப் போலிஸ் விளக்கமளித்தது.
டுவிட்டர் நிறுவனத்தின் இப்போக்கு குறித்து விளக்கம் அளிக்குமாறு நாடாளுமன்றக் குழு அதற்கு உத்தரவிட்டிருந்தது.

