சண்டிகர்: கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்த இந்தியாவின் மிகப்புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கின் இறுதிச் சடங்கு நேற்று மாலை முழு அர சாங்க மரியாதையுடன் நடைபெற்றது. ஒரு மாதத்துக்கு முன்னர் தொற்றுகண்ட திரு சிங், அதன் தொடர்பிலான மருத்துவப் பிரச்சினைகளால் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 91.
ஒரு மாதத்துக்கு முன்னர் திரு சிங்குக்கு கிருமி தொற்றியது. சண்டிகர் நகரில் உள்ள தமது இல்லத்தில் தனிமையில் இருந்த அவர் பின்னர் அங்குள்ள பிஜிமர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரைப் போலவே கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட அவரது 85 வயது மனைவி நிர்மல் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் மருத்துவமனையில் மரணமுற்றார்.
மருத்துவக் குழு பெரிதும் முயற்சி செய்தும் கடுமையாகப் பேராடியும் திரு சிங்கை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவ மனை கூறியது.
'பறக்கும் சீக்கியர்' என்றும் அழைக்கப்பட்ட திரு மில்கா சிங், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நான்கு முறை தங்கப் பதக்கம் பெற்றவர். 1958ல் இந்தியாவுக்கு காமன்வெல்த் போட்டிகளில் முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்தார். அந்த இரண்டு போட்டிகளிலும் தங்கம் பெற்ற ஒரே இந்தியர் அவர். அத்துடன் 1960ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திரு சிங் நான்காவதாக வந்தார்.
இந்தியாவின் பத்மஸ்ரீ விருது பெற்ற திரு சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
நாடு மகத்தான விளையாட்டு வீரரை இழந்துவிட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

