புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வழங்குவது, அங்கு சட்டசபை தேர்தலை நடத்துவது ஆகியவை குறித்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 24ஆம் தேதி பேச்சு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதி 2019 ஆகஸ்ட்டில் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அது பிரிக்கப்பட்டது.
இதில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், சட்ட சபையைக் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதால் மீண்டும் மாநிலத் தகுதி அளிப்பது குறித்தும் சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இம்மாதம் 24ஆம் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சி களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும். இது தொடர்பாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பணி முடிந்ததும் இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் சட்ட சபை தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி அளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தியின் உறவினரும் அந்த கட்சியின் மூத்த தலைவருமான சர்தாஜ் மதானி வீட்டுச் சிறையில் இருந்து நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரும் ஆேலா சனைக் கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

