புதுடெல்லி: மருத்துவர், சுகாதாரப் பணியாளர்களைத் தாக்குவோர் மீது உடனடி வழக்குப் பதிவு செய்ய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கிருமித்தொற்று சிகிச்சை தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவர், சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதன் காரணமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா நேற்று முன்தினம் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார்.
"டாக்டர் உட்பட சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல், தாக்குதல் போன்றவை, அவர்களது மன உறுதியைக் குறைத்து, பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கக்கூடும். எனவே தாக்கு தலில் ஈடுபடுவோர் மீது 2020ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவர் உட்பட சுகாதாரப் பணியாளர்களைத் தாக்கினால் ஐந்து அல்லது ஏழு ஆண்டுகள் சிறை இரண்டு அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப் படலாம்.

