புதுடெல்லி: 'ஆரோக்கியத்துக்கு யோகா' என்பதுதான் இந்த ஆண்டின் அனைத்துலக யோகா தினத்துக்கான கருப்பொருள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொரோனா பொருந்தொற்றுக் காலத்தில் யோகா புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏழாவது அனைத்துலக யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாசனத்தால் ஏற்படும் நன்மைகளை விவரித்தார்.
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகாவை முன்னோர்களும் சாதுக்களும் உடல்நலத்தின் அளவீடாகக் கருதினர் என்று குறிப்பிட்ட அவர், திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டிப் பேசினார்.
'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்'
என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஒரு நோயின் அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவேண்டும் என்று தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறியுள்ளதாக விளக்கினார்.
"கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா கிருமியை வெல்ல நாம் அனைவரும் யோகாவைக் கடைப்பிடிக்க வேண்டும். யோகாசனம் நமது உள்வலிமையைக் கூட்டுகிறது.
"உடல், மன நலம் ஆகிய இரண்டையும்தான் யோகா அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும் எதிர்மறை சக்தியை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது," என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களும் முன்களப் பணியாளர்களும் யோகாவைத் தங்களது பாதுகாப்பு ஆயுதமாகக் கருதவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், யோகா செய்வதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து மீள முடியும் என்றார்.
இதற்கிடையே கொரோனாவுக்கு எதிராகப் போராடத் தேவைப்படும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க யோகா உதவும் என மத்திய சுகதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு இந்திய அதிபர் , மத்திய அமைச்சர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளிட்டோர் நேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
லடாக் எல்லைப் பகுதியில், 18 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் ராணுவச் சீருடை அணிந்து யோகா பயிற்சி செய்தனர். மேலும் பல்வேறு மாநிலங்களிலும் யோகா சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

