திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கக் கடத்தில் வழக்கில் தொடர்புடைய 53 பேருக்கு சுங்க இலாகா நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது சுங்க சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரகத்தைப் பயன்படுத்தி கேரளாவுக்கு பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டபோது மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தன.
இதையடுத்து தூதரக முன்னாள் ஊழியரான ஸ்வப்னா உள்ளிட்ட சில அதிகாரிகளும் கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கர் மீதும் வழக்குப் பதிவானது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிவசங்கர், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 53 பேருக்கு சுங்க இலாகா ஆணையர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், அவர்கள் மீது சுங்க சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேட்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க சுங்க இலாகா முப்பது நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

