வரதட்சணை கேட்டு ஆணிகளால் அடித்து கணவர் தம்மை துன்புறுத்தியதாக வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிய அடுத்தநாள் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை போலிசார் மீட்டுள்ளனர். இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லத்தில் நேற்று இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொல்லத்தை சேர்ந்த விஸ்மயா என்ற 24 வயது பெண் நேற்று அவரின் கணவர் கிரண் குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வரதட்சணை கொடுமை காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர்.
ஆனால், முன்னதாக விஸ்மயா தமது தம்பிக்கு அனுப்பிய வாட்ஸ்அப் தகவலில் தம்முடைய தலைமுடியை இழுத்து கிரண் அடித்தார் என்றும் கதவோடு தலையை அடித்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
விஸ்மயா அனுப்பியிருந்த இன்னொரு தகவலில், வீட்டுக்கு வந்ததும் கதவை சாத்திவிட்டு அடிக்கும் கிரணோடு இருந்து தம்மால் இனியும் சித்திரவதைகளை அனுபவிக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
அதோடு, தமக்கு ஏற்பட்ட காயங்களைக் காட்டும் புகைப்படங்களை விஸ்மயா வெளியிட்டார். அவரது முகத்தின் பல இடங்கள் வீக்கத்துடன் காணப்பட்டன.
அதேபோல் வீங்கிய கண்களைக் காட்டும் புகைப்படம் ஒன்றையும் விஸ்மயா பகிர்ந்தார். கிரண் தமது கண்களைக் கட்டையால் தாக்கியதாக விஸ்மயா கூறியிருந்தார். அதைக் காட்டும் புகைப்படத்தை தமது தம்பிக்கு அவர் அனுப்பினார்.
ஆணிகளை வைத்து தம்மை கிரண் மோசமாக தாக்கியதாக விஸ்மயா வாட்ஸ்அப் உரையாடலில் குறிப்பிட்டிருந்தார்.
வரதட்சணை கேட்டு விஸ்மயா தினமும் இப்படி தாக்கப்பட்டு வந்த நிலையில்தான் நேற்று மர்மமான முறையில் வீட்டு அறையில் இறந்து கிடந்தார்.
அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று போலிசார் சந்தேகிக்கிறார்கள்.