புதுவை: கடந்த பல நாட்களாக புதுவையில் நீடித்துவந்த அரசியல் குழப்பமும் நெருக்கடியும் முடிவுக்கு வந்துள்ளன. இதையடுத்து அங்கு புதிய அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த புதுவைச் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி கண்டது.
ஆட்சியைக் கைப்பற்றியதும் ரங்கசாமி முதல்வராகப் பதவி ஏற்ற நிலையில், பாஜகவைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவியும் ஒருவருக்கு சபாநாயகர் பதவியும் அளிக்கப்பட வேண்டுமென அக்கட்சித் தலைமை வலியுறுத்தியதாகத் தகவல் வெளியானது. எனினும் இக்கோரிக்கையை முதல்வர் ரங்கசாமி ஏற்காததால் புதிய அமைச்சரவை பதவி ஏற்பதில் தாமதம் நீடித்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருதரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தையின் முடிவில் இணக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து புதுவை ஆளுநர் தமிழிசையை முதல்வர் ரங்கசாமி சந்தித்து அமைச்சர்கள் பட்டியலை அளித்துள்ளதாகவும் அதற்கு உள்துறையின் ஒப்புதலைப் பெற ஆளுநர் மாளிகை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பதவியேற்பு நிகழ்வு நடைபெறாவிட்டால் வரும் 27ஆம் தேதி நடைபெறக்கூடும் என 'மாலை மலர்' ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

