புதுடெல்லி கூட்டத்தில் காஷ்மீரின் எட்டு மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
காஷ்மீரில் தேர்தல் நடத்துவது, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டது ஆகியவை குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு தேர்தல் நடத்த விரும்புகிறது மத்திய அரசு. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எட்டு மாநில கட்சிகளைச் சேர்ந்த 14 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்ற கோரிக்கையை காஷ்மீர் தலைவர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர். மேலும் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினர்.
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தானிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரான மெஹ்பூபா முஃப்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நேற்றைய ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் அதை வலியுறுத்தினார்.
இதற்கிடையே தலிபான் இயக்கத்துடன் இந்திய அரசு மறைமுக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா, தனது படைகளை முழுவதுமாகத் திரும்பப் பெறும் என அறிவித்துள்ளது. அந்த நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இதுவரை ஏற்படுத்தி உள்ள தாக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் உள்ள அம்சங்களையும் இழக்க இந்திய அரசு விரும்பவில்லை என்றும் அதன் காரணமாகவே தலிபான் இயக்கத்துடன் பேச்சுவார்த்தைக்கான தொடர்புகளை ஏற்படுத்த இந்தியா விரும்புகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஆப்கானிஸ்தானில் ஏற்படும் மாற்றங்கள் காஷ்மீரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த அனுமதித்துவிடக்கூடாது என்பதில் இந்திய அரசு கவனமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
நேற்றைய கூட்டத்தில் என்னென்ன அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் முன்கூட்டியே விவரம் ஏதும் தெரிவிக்கபடவில்லை.
இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு தேர்தலை நடத்த மத்திய அரசு விரும்புவதால் காஷ்மீரின் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும், தொகுதி வரையறை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஏழு கட்சிகளை உள்ளடக்கிய குப்கர் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லாவும் மெஹ்பூபா முஃப்தியும் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறப்படும் நிலையில், காங்கிரசும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது.

