போலி சமூக ஊடகக் கணக்குகளை முடக்குவதற்கு மத்திய அரசு கெடு
புதுடெல்லி: 'சமூக வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றில் போலிக் கணக்குகள் மூலம் தவறான செய்திகளைப் பரப்பும் போக்கு அதிகரித்துள்ளது. அதனையடுத்து 24 மணி நேரத்துக்குள் இந்தியாவில் இயங்கும் போலிச் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட வேண்டும் என இந்திய அரசு அதன் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளில் கூறியுள்ளது. அதன்படி 'ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பயனாளர்களின் பெயர்களில் துவங்கப்படும் போலிக் கணக்குகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால், 24 மணி நேரத்திற்குள் அந்த போலிக் கணக்குகள் முடக்கப்பட வேண்டும்' என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் போன்ற பிரபலங்களின் கணக்குகளில் இருந்து புகைப்படங்களை எடுத்து, அவர்களின் பெயரில் போலியான கணக்குகளைத் துவங்கும் போக்கு பரவலாக காணப்படுகிறது.
ஆயிஷா சுல்தானாவுக்கு முன் பிணை
வழங்கியது கேரள உயர்நீதிமன்றம்
கவராத்தி: லட்சத்தீவைச் சேர்ந்த நடிகையும் தயாரிப்பாளருமான ஆயிஷா சுல்தானா, தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, லட்சத்தீவில் கொரோனா பரவுவதற்கு மத்திய அரசு உயிரி ஆயுதத்தைப் பயன்படுத்துவதாகப் பேசினார். லட்சத்தீவு நிர்வாக அதிகாரிக்கு எதிரான இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக தலைவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவின் கவராத்தி போலிசார் சீர்குலைவுச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, முன்பிணை கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் ஆயிஷா சுல்தானா விண்ணப்பித்திருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒரு வாரத்திற்கு இடைக்கால முன்பிணை வழங்கியதுடன், காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு ஆயிஷா சுல்தானாவுக்கு உத்தரவிட்டது. அதன்படி லட்சத்தீவு காவல்துறை நடத்திய விசாரணையில் பங்கேற்று விளக்கம் அளித்தார் ஆயிஷா சுல்தானா.
ஒரே பயணியாக விமானத்தில் துபாய் பறந்த இந்திய தொழிலதிபர்
புதுடெல்லி: அமிர்தசரசில் இருந்து புதன்கிழமை துபாய்க்குச் சென்ற விமானம் ஒன்றில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.பி.சிங் ஓபராய் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த விமானத்தில் இவரைத் தவிர வேறு எந்த ஒரு பயணியும் பயணம் செய்யவில்லை. "வாழ்க்கையில் சில நேரங்களில் முக்கியமான சூழ்நிலைகளில் நாம் வாழ்க்கையை மதிக்கத்தக்க வாய்ப்புகள் கிடைக்கும். இந்தப் பயணமும் அப்படிதான் மறக்கமுடியாத பயணமாக அமைந்துவிட்டது. முற்றிலும் மறக்கமுடியாத பயணமாக மாற்றிய சிறப்பு சேவைகளுக்காக ஏர் இந்தியாவுக்கு நன்றி," என்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். பெருந்தொற்றின் இரண்டாவது அலை அதிகரிப்பால் ஏப்ரல் 24 முதல் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு சிற்றரசுக்கும் இடையில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. இருப்பினும் சிறப்பு விமானச் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
'மாநிலங்களிடம் 1.50 கோடி
தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு'
புதுடெல்லி: மாநிலங்களின் கையிருப்பில் 1.50 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகள் உள்ளதாக மத்திய அரசு நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. "மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 305,432,450 கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.
அதில், 290,404,264 கொரோனா தடுப்பூசி மருந்துகள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன. கையிருப்பில் 15,028,186 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், சில மாநிலங்களுக்கு 4,700,000 தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், நாள்தோறும் 50 லட்சம் பேர் வரை தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள் என மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

