கோல்கத்தா: கோல்கத்தாவில் உள்ள சிட்டி கல்லூரி வளாகத்தில் கடந்த 18ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடந்துள்ளது. அதிலும், அங்கு ரஷ்யாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஸ்புட்னிக் மருந்து செலுத்தப்படுவதாக தகவல் பரவியது.
பலரும் அங்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆனால், சிலருக்கு தடுப்பூசி போட்ட பிறகு பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டன. ஆனால் இதெல்லாம் பொதுவானதுதான் என்று எண்ணிக் கொண்டிருந்தனர்.
ஆனால், அந்த முகாமை நடத்திய நபரை, போலி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தியதாகக் கூறி காவல்துறையினர் கைது செய்த போதுதான், அங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய சுகாதாரத் துறையினர், அந்த முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஏதேனும் உடல் நலப் பிரச்சினை ஏற்பட்டால், மருத்துவ உதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரி என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, கோல்கத்தாவில் போலி தடுப்பூசி முகாம் நடத்திய டெபஞ்சன் டெப் என்பவரை கோல்கத்தா போலிஸ் கைது செய்துள்ளது.
இந்த ஆடவர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலருடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. திரிணாமுல் தலைவர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இதுகுறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜகவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அந்த முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட நூற்றுக்கு மேலானவர்களில் திரிணாமூல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான மிமி சக்ரபோர்த்தியும் ஒருவர்.
இது போலி தடுப்பூசி முகாம் என்று அறிந்ததும் அவர் போலிஸில் புகார் கொடுத்தார். அதனையடுத்து அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.
அந்த முகாமில் இருந்து ஊசி மருந்து உள்ளிட்ட பொருட்களை போலிசார் கைப்பற்றினர்.

