கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன், திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த தொண்டர்கள் பலர் கூட்டம் கூட்டமாக மீண்டும் திரிணாமூல் காங்கிரசுக்குத் திரும்பி வருகின்றனர்.
அந்த வகையில் பிர்பும் மாவட்டத்தை சேர்ந்த பாஜக தொண்டர்கள் 150 பேர் நேற்று முன்தினம் திரிணாமூல் காங்கிரசில் இணைந்தனர். இதற்காக இளம்பஜார் பகுதியில் மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. பாஜக.வில் இருந்து விலகிய தொண்டர்களை அதில் நிறுத்தி அவர்கள் மீது கிருமிநாசினி (சானிடைசர்) தெளிக்கப்பட்டது. அதன்பின்னர் உள்ளூர் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள், அவர்களுக்கு தங்கள் கட்சிக்கொடியை வழங்கி கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
இது குறித்து உள்ளூர் நிர்வாகி ஒருவர் கூறும்போது, 'பா.ஜனதாவில் பணியாற்றியவர்களை மீண்டும் ஏற்பதற்கு முன் அவர்களை தூய்மைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது," என்று தெரிவித்தார்.
முன்னதாக ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்த 200 பேர் அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி மீண்டும் திரிணாமூல் காங்கிரசில் இணைந்திருந்தனர். அப்போது அவர்கள் தங்கள் தலையை மழித்துக்கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து தாங்கள் பாவம் செய்து விட்டதாகவும் அதற்குப் பரிகாரமாகமாக இவ்வாறு தலையை மழித்துக் கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.

