புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சி நடந்து வருகிறது. அமரீந்தர் சிங்கின் தலைமைக்கு முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு வழக்குகளில் நடவடிக்கை இல்லாதது, தலித் சமூகத்தினருக்கு அரசில் போதிய பிரதிநிதித்துவம் வழங்காதது, முதல்வரை எளிதில் அணுக முடியாதது உள்ளிட்ட பல்வேறு புகார்களை அவர்கள் எழுப்பியுள்ளனர்.
பஞ்சாப் சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உட்கட்சி பூசலை தீர்க்க மல்லிகார்ஜுன கார்கே, ஹரீஷ் ராவத், ஜே.பி.அகர்வால் ஆகியோரைக் கொண்ட மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர், முதல்வர் அமரீந்தர், முன்னாள் அமைச்சர் சித்து, பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை அழைத்து கருத்து கேட்டறிந்தனர். இந்நிலையில் டெல்லியில் இக்குழுவினரை முதல்வர் அமரீந்தர் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டாவது முறையாக சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே, "பஞ்சாப் முதல்வர் பதவியில் அமரீந்தர் சிங் நீடிப்பார். அதிருப்தியாளர்களின் குறைகளைப் போக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்," என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அறிவித்துள்ளது.

