எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப்: மூன்றாவது அலையால் அதிக பாதிப்புகள் இருக்காது
மும்பை: மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்வுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு அடுத்தபடியாக கறுப்புப் பூஞ்சை நோய் பாதிப்பும் இங்குதான் அதிகம். இப்போது கொரோனாவின் உருமாறிய 'டெல்டா பிளஸ்' தொற்றும் மகாராஷ்டிராவில் பரவி வருகிறது.
கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொண்டு சமாளித்துள்ள நிலையில் அங்கு மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.
இதற்கேற்ப கடந்த சில தினங்களாக மகாராஷ்டிராவில் மீண்டும் தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமையில் இருந்து அன்றாடம் பதிவாகும் தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு மேலும் கீழுமாய் பதிவாகி வருகிறது. மறுபக்கம் உயிர் இழப்பும் அதிகரித்து வருவதால் ஊரடங்குத் தளர்வுகளை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை அம்மாநிலத்தை ஐந்து பிரிவுகளாகப் பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுப் பாதிப்பு, உயிர்வாயு உதவியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பியது ஆகியவற்றை அளவுகோலாக வைத்து ஐந்து பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.
அதன்படி முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள பகுதிகளில் ஏறக்குறைய எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. இரண்டாவது பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வணிக வளாகங்களும் திரையரங்குகளும் திறக்க அனுமதிக்கப்பட்டது.
மூன்றாவது பிரிவில் உள்ள நகர்ப்பகுதிகளில் வார நாட்களில் மட்டும் கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவை திறக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் தொற்று அதிகரித்ததை அடுத்து மகாராஷ்டிராவில் தளர்வுகள் குறைக்கப்பட்டுள்ளன. முதலாவது, இரண்டாவது பிரிவு தளர்வுகளை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணியைத் துரிதப்படுத்தவும் வேகப்படுத்தவும் மாவட்ட உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே மூன்றாவது அலை உருவாகும் பட்சத்தில் அதன் பாதிப்பு இரண்டாவது அலையைப் போல் மோசமாக இருக்காது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இரண்டாவது அலையின்போது கற்ற பாடத்தைப் படிப்பினையாகப் பின்பற்றினால் மூன்றாவது அலையை எதிர்கொள்ள இயலும் என்று பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே கேரளாவில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு நீடிக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்களை இழந்த நிலையில் , இரண்டாவது அலையில் 776 மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

