புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 'டெல்டா பிளஸ்' வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மேலும் நான்கு உருமாறிய கொரோனா தொற்று குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் அனைத்துலக விமானப் பயணங்கள் தொடங்கப்பட்டால் வெவ்வேறு உருமாறிய கொரோனாக்கள் பல்வேறு நாடுகளுக்குப் பரவும் என அஞ்சப்படுகிறது.
அந்த வகையில் இந்தியாவுக்குள்ளும் புதிய தொற்றுகள் ஊடுருவக்கூடும் என்பதே நிபுணர்களின் எச்சரிக்கை.
கிருமிகள் அதிகரிக்கும்போது அவை மேலும் திரிபடையும் என்றும் அவற்றின் ஆற்றல் மேலும் மாறுபடும் என்றும் சொல்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் விக்னேஷ் நாயுடு.
உருமாறிய கொரோனா வகைகளில் ஒன்றான 'லாம்டா' தொற்று குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்கிறார் மூத்த மரபணு வியலாளர் எம். காஜா.
"உருமாறிய கொரோனா வகைகளின் மரபணு அமைப்பை ஆராய்வதன் மூலம் அவை எந்தெந்த வகையில் உருமாறுகின்றன, அதன் தன்மை என்ன, எத்தகைய நோய் அறிகுறிகளை அவை ஏற்படுத்தும், தொற்று விகிதம் எப்படி இருக்கும், நோயின் தீவிரம் ஆகியவை குறித்து நம்மால் புரிந்துகொள்ள முடியும்," என்கிறார் மருத்துவர் விக்னேஷ்.
இதற்கிடையே நாடு முழுவதும் நேற்று முன்தினம் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.
திங்கள்கிழமை அன்று 979 பேர் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் 46,148 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

