மாதந்தோறும் 100 மில்லியன் தடுப்பூசிகள்; உற்பத்தியை அதிகரித்தது இந்திய சீரம் மையம்
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த இரு வாரங்களில் பதிவு செய்தவர்களைவிட அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்து சென்ற மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. தடுப்பூசி உற்பத்தி நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும் என மாநில முதல்வர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான இந்திய சீரம் மையம், தனது உற்பத்தித் திறனை மேலும் அதிகரித்துள்ளது. அதன் பலனாக மாதந்தோறும் 100 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய அம்மையம் தயாராகி உள்ளது.
மேலும், ஜூலை மாதம் முதல் இந்த இலக்கை முன்வைத்து இயங்கப் போவதாக அம்மையம் உறுதி செய்துள்ளது. கடந்த மே மாதம் சீரம் மையம் 65 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்த நிலையில் இம்மாதம் அது 90 மில்லியனாக அதிகரிக்க உள்ளது.
ஜூலை முதல் ஆண்டு இறுதிவரை மாதந்தோறும் 100 மில்லியன் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை சீரம் மையம் உற்பத்தி செய்யும்.
இதற்கிடையே இந்த உற்பத்தி அதிகரிப்பானது குடிமக்களுக்குத் தடுப்பூசி போடும் இந்திய அரசின் நடவடிக்கைக்கு வெகுவாகக் கைகொடுத்திருக்கிறது. இம்மாதம் 12ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நாடு முழுவதும் 61 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இது தடுப்பூசிக்காக பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்றும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் 58 மில்லியன் பேர் மட்டுமே அரசாங்கத்தின் தடுப்பூசிக்கான 'கோவின்' இணையத்தளத்தில் பெயரைப் பதிந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த மே மாதம் முதல் தடுப்பூசி போடும் இயக்கம் விரிவுபடுத்தப்பட்ட நிலையில் முதன்முறையாக பதிந்துகொண்டவர்களைவிட அதிகமானோருக்கு ஊசி போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 323.9 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதிக தடுப்பூசிகள் போடப்பட்ட நாடுகளின் பட்டியலில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் உள்ளது இந்தியா. இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குடிமக்களுக்கும் தடுப்பூசி போடவேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

