புதுடெல்லி: கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் ஓயவில்லை என இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 80க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொற்று விகிதம் இன்னும்கூட அதிகமாக இருப்பதை அம்மன்றம் சுட்டிக் காட்டி உள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த கழகத்தின் இயக்குநரான மருத்துவர் பல்ராம் பார்கவா, இப்போது அலட்சியமாக இருந்தால் மீண்டும் சிக்கலைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றார்.
ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா உள்ளிட்ட உருமாறிய கொரோனா தொற்றுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் திறம்பட செயலாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
80 மாவட்டங்களில் நீடித்துவரும் பாதிப்பு பிற இடங்களுக்கும் பரவி விடாமல் தடுக்க வேண்டியது மிக அவசியம் என்றார் பல்ராம் பார்கவா.
இதற்கிடையே இந்தியாவில் நாள்தோறும் அதிக அளவில் தடுப்பூசி போடப்படுவது பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'கோவின்' இணையத்தளத்தின் மூலம் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தடுப்பூசிக்காக பதிவு செய்கின்றனர்.
இதையடுத்து அந்த வலைத்தளத்தைப் போல் தங்களுக்கும் ஒன்றை உருவாக்கித் தருமாறு 50 நாடுகள் இந்தியாவை அணுகி உள்ளன.
இதற்குரிய மென்பொருளை அந்நாடுகளுக்கு இலவசமாக வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தடுப்பூசி திட்டத்துக்கான குழுவின் தலைவர் மருத்துவர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடு முழுவதும் கறுப்புப் பூஞ்சை பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
திங்கட்கிழமை வரை 40,845 பேருக்கு பூஞ்சை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 34,940 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றார் அவர்.

