புதுடெல்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனா கிருமித்தொற்றால் 723 பேர் உயிரிழந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் பதிவான ஆகக்குறைவான மரண எண்ணிக்கை இதுவாகும்.
திங்கட்கிழமை 39,796 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது 482,071 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 29,700,430 பேர் கிருமித்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் புதிதாக பாதிக்கப்பட்டோர் பட்டியலில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு திங்கட்கிழமை 12,100 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
மகாராஷ்டிராவில் 9,336, ஆந்தி ராவில் 3,175, ஒடிசாவில் 2,870, தமிழகத்தில் 3,867 பேர் புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
நாட்டில் பதிவான புதிய தொற்றுச் சம்பவங்களில் சுமார் 78 விழுக்காட்டுச் சம்பவங்கள் இந்த ஐந்து மாநிலங்களில்தான் பதிவாகி உள்ளன.
புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் 30.41 விழுக்காடு கேரளாவின் பங்களிப்பாக உள்ளது என சுகாதார அமைச்சின் அண்மைய அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் எந்தவித நோய்களும் இல்லாத இளையர்கள் அதிக அளவில் பலியாகிவிட்டதாக அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் மருத்துவமனை, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன.
மொத்தம், 18,961 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்போது 20 முதல் 39 வயதுக்குட்பட்ட இளையர்கள் பலர் கிருமித்தொற்றுப் பாதிப்புக்கு ஆளானதும் அவர்களில் பெரும்பாலானோர் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்படாதவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் 13 மாவட்டங்களில் கிருமிப் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது.

