புதுடெல்லி: அண்மையில் விரிவுபடுத்தப்பட்ட இந்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 78 பேரில் குறைந்தது 42 விழுக்காட்டினர்க்கு எதிராக குற்றவியல் வழக்குகள் உள்ளன என்று ஜனநாயகச் சீர்திருத்தச் சங்கம் (ஏடிஆர்) எனும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
அவர்களில் நால்வர்மீது கொலை முயற்சி வழக்குகள் இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அந்த அமைச்சர்கள் தாக்கல் செய்த தேர்தல் ஆவணங்களின் அடிப்படையில் 'ஏடிஆர்' அமைப்பு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அவர்களில் 33 பேர் தங்கள்மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக அந்த ஆவணங்களில் குறிப்பிட்டு உள்ளனர். அவர்களில் 24 பேர் மீது கொலை, கொலை முயற்சி அல்லது கொள்ளை போன்ற கடும் குற்றவியல் வழக்குகள் உள்ளன.
அத்துடன், 70 அமைச்சர்கள் ஒரு கோடிக்குமேல் சொத்து வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜோதிராதித்ய சிந்தியா (ரூ.379 கோடி), பியூஷ் கோயல் (ரூ.95 கோடி), நாராயண் ரானே (ரூ.87 கோடி), ராஜீவ் சந்திரசேகர் (ரூ.64 கோடி) ஆகியோர் பணக்கார அமைச்சர்கள் பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருப்பவர்கள்.
அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.16.24 கோடி என அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
திரிபுராவைச் சேர்ந்த பிரத்திமா பௌமிக் (ரூ.6 லட்சம்), மேற்கு வங்கத்தவரான ஜான் பர்லா (ரூ.14 லட்சம்), ராஜஸ்தானின் கைலாஷ் சௌத்ரி (ரூ.24 லட்சம்), ஒடிசா மாநிலத்தின் பிஷ்வேஸ்வர் துடு (ரூ.27 லட்சம்), கேரளாவைச் சேர்ந்தவரும் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான வி.முரளிதரன் (ரூ.27 லட்சம்) ஆகியோர் சொத்துப் பட்டியலில் கடைசி நிலைகளில் இருக்கின்றனர்.
தேர்தல் உரிமைகள் குழுவான ஏடிஆர், தேர்தலுக்குமுன் அரசியல்வாதிகளின் பின்னணி குறித்த தகவல்களை உறுதிசெய்து, அறிக்கையாக வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

