காஷ்மீரில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிரடி சோதனையில் எழுவர் பிடிபட்டனர்
லக்னோ: அல் காய்தா அமைப்புடன் தொடர்புள்ள பயங்கரவாதிகள் இருவரை உத்தரப் பிரதேச போலிசார் கைது செய்துள்ளனர். இருவரும் சுதந்திர தினத்தன்று பல்வேறு நாச வேலைகளை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான இருவரும் அன்சார் கஸ்வத்துல் ஹிந்த் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மின்ஹாஸ் அகமது, மசீருதீன் ஆகிய அவ்விரு பயங்கரவாதிகளும் மனித வெடிகுண்டு தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தனர். மேலும், ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் நாச வேலைகளைப் புரியவும் திட்டம் தீட்டியிருந்தனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவது அவர்களது திட்டமாக இருந்துள்ளது.
இதற்காக நிறைய ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் இருவரும் சேகரித்துள்ளனர்.
லக்னோ நகரில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலிஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது மின்ஹாசும் மசீருதீனும் பிடிபட்டனர்.
விசாரணையின்போது தங்களுடன் இருந்த மேலும் சில பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தப்பிச் சென்றவர்களுக்கும் வலைவீசப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காஷ்மீரில் நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஏழு இடங்களில் ஒருசேர அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். அப்போது எழுவர் கைதாகினர்.
பயங்கரவாதச் செயல்களுக்கு சில தரப்பினர் நிதியுதவி வழங்குவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் விதமாக இளையர்களைக் குறிவைத்து சிலர் செயல்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த தூண்டிவிடப்படுகின்றனர்.
இது தொடர்பாக இணையம் வழி திட்டமிட்டே பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இத்தகைய நடவடிக்கைகளுக்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் பேரில் குறிப்பிட்ட ஓர் அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அறுவர் கைதாகி உள்ளனர் என்றும் அவர்களிடம் இருந்து மிக முக்கிய ஆவணங்கள், மின்னிலக்கக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில்தான் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் செயல்பட்ட 11 அரசு ஊழியர்களை ஜம்மு காஷ்மீர் அரசு பணிநீக்கம் செய்தது. அதற்கு அடுத்த நாளே மேற்குறிப்பிட்ட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.