திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா கிருமித்தொற்று அதிகரித்துள்ள நிலையில், 'ஸிக்கா' தொற்றுப் பரவலும் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
அம்மாநிலத்தில் இதுவரை 18 பேருக்கு 'ஸிக்கா' கிருமி தொற்றியுள்ளது. இவர்களில் ஒன்றரை வயது குழந்தையும் அடங்கும்.
பாதிக்கப்பட்ட அனைவரும் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா கிருமி, 'ஸிக்கா' கிருமி பரவலைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆறு பேர் கொண்ட மத்திய நிபுணர்கள் குழு கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இக்குழுவினர் திருவனந்தபுரத்தில் மாவட்ட மருத்துவ அதிகாரிகளுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, கேரளாவில் கொரோனா கிருமித்தொற்றால் ஞாயிற்றுக்கிழமை அன்று 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், கேரளாவில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மாநில அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

