புதுடெல்லி: கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க இயலாது என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே அதிகமாகப் பாதிக்கப்படக் கூடாது எனில் மக்கள் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று அச்சங்கம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், மத்திய - மாநில அரசுகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவ சங்கம் வலியுறுத்தி உள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டு இருப்பதால் கொரோனா மூன்றாம் அலை மிகவும் விரைவில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கொரோனா தொற்றுப்பரவல் தொடர்பாக அனைத்துலக அளவில் நமக்கு இதுவரை கிடைத்துள்ள தரவுகளையும் சான்றுகளையும் வைத்து பார்த்தால், மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்பதே சரி," என்று மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
மக்கள் கூட்டமாக கூடும் நிகழ்வுகள்தான் மூன்றாவது அலையின் துவக்கப் புள்ளி என்றும், கூட்டம் கூடுவது அறவே தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வழிகாட்டும் நெறிமுறைகளை பலர் பயன்படுத்துவதில்லை என்று குறிப்பிட்டுள்ள இந்திய மருத்துவ சங்கம், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இவ்வாறு ஒன்றுகூட அனுமதிப்பது மூன்றாவது அலையை உறுதி செய்வது போன்றது எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார் பிரபல இயற்பியல் நிபுணர் விபின் ஸ்ரீவஸ்தவா.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவித் துணை வேந்தரான இவர், கடந்த நான்காம் தேதியே மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்.
"இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து கடந்த 461 நாள்களாக பாதிப்பு, உயிரிழப்பு உள்ளிட்ட புள்ளி விவரங்களை ஆய்வு செய்து மூன்று அளவீடுகளை உருவாக்கி உள்ளேன்.
"அவற்றைக் கொண்டு கணக்கிடும்போது, இரண்டாவது அலையின்போது நிகழ்ந்தது போன்றே மரண எண்ணிக்கை ஏற்ற இறக்கமாகப் பதிவாகி வருகிறது. எனவே மூன்றாவது அலை தொடங்கி இருக்க வேண்டும். கவனமாகச் செயல்படாவிட்டால் அது மேலும் தீவிரமடையும்," என விபின் ஸ்ரீவஸ்தவா எச்சரித்துள்ளார்.

