திருவனந்தபுரம்: இந்தியாவின் முதலாவது கொரோனா நோயாளியான கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த மாணவிக்கு மீண்டும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு சீனாவின் வூகான் மாநிலத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா கிருமித்தொற்று உலகம் முழுவதும் பரவி இப்போது உருமாறத் தொடங்கியது.
ஒட்டுமொத்த உலக நாடுகளையும் மிக மோசமாக முடக்கி வரலாறு காணாத உயிரிழப்புகளை கொரோனா தொற்று ஏற்படுத்தி வருகிறது.
தற்போது கொரோனா பரவலின் 3வது அலையை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா 3-வது அலை பரவல் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்திய மருத்துவர் சங்கமும் இதேபோல் அடுத்தடுத்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்த நிலையில் நாட்டின் முதலாவது கொரோனா நோயாளியான கேரளா திருச்சூரைச் சேர்ந்த 21 வயது மாணவிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த மாணவி சீனாவின் வூகானில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி நாடு திரும்பினார்.
அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து சுமார் ஒரு மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் அந்த மாணவி. ஒரு மாதச் சிகிச்சையைத் தொடர்ந்து அம்மாணவி குணமடைந்தார். இப்போது டெல்லி பயணம் மேற்கொள்ள அம்மாணவி திட்டமிட்டிருந்தார்.
இதற்காக கொரோனா பரிசோதனைகளை அவர் மேற்கொண்டார். ஆன்டிஜன் சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என கூறப்பட்டது. ஆனால், ஆர்டி பிசிஆர் சோதனையில் லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதியானது.
திருச்சூர் மாவட்ட மருத்துவர்கள் அந்த மாணவியை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்தியா முழுதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 புதிய தொற்றும் 624 தொற்று மரணங்களும் பதிவாகி உள்ளன. இது கடந்த 118 நாட்களில் மிகக் குறைவு.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.28% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41,000 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 4,29,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்ட 4,31,315 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; கடந்த 109 நாட்களில் இது மிகக் குறைவு.
இது மொத்த தொற்று பாதிப்பின் எண்ணிக்கையில் 1.40% ஆகும். இந்தியாவில் இதுவரை 43.40 கோடி பேருக்கு கொவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மிசோரம், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பி வைத்தது.

