திருவனந்தபுரம்: கேரள அரசு செயல்படுத்த உள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு இயன்ற உதவிகளைச் செய்யும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியுடனான அண்மைய சந்திப்பு பயனுள்ள வகையில் அமைந்ததாக குறிப்பிட்டார்.
"திருவனந்தபுரத்தில் லைட் மெட்ரோ திட்டம், கொச்சி மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை ஆகிய பல்வேறு திட்டங்களுக்கு உதவுவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். கேரளாவில் கெயில் நிறுவனத்தின் திட்டத்தை கேரள அரசு வெற்றிகரமாக முடிக்கும் என்பதில் பிரதமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
"உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து திட்டங்களில் ஆர்வம் காட்டிய பிரதமர், அதை கேரளாவில் மேலும் பிரபலப்படுத்த வேண்டும் என்றார்.
"வாரணாசி-கொல்கத்தா நீர்வழிப் பாதைத் திட்டம் போல கேரளாவிலும் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுரை வழங்கினார்," என்றார் முதல்வர் பினராயி விஜயன்.
கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதை கேரள அரசு எதிர்நோக்கி உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜூலை மாதத்துக்குள் கேரளாவுக்கு ஆறு மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தாம் கோரிக்கை வைத்ததாகவும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

