புதுடெல்லி: வன்முறை மூலமாகவும் வலுகட்டாயமாகவும் ஆட்சியைப் பறிப்பது இந்த உலகத்துக்கு எதிரான செயல்பாடு என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
தஜகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்காலமானது கடந்த காலத்தில் இருந்ததுபோல் இருக்கக் கூடாது என்றார்.
காபூலின் அண்டை நாடுகள் பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதத்தால் அச்சுறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிக்கப்படுவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
"பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமைதியின்மை, கொரோனாவால் ஏற்பட்டுள்ள சுகாதாரப் பிரச்சினை, பொருளாதார பாதிப்பு ஆகியவற்றால் நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
"ஒரு பூமி, ஒரே சுகாதாரம் என்ற நோக்கத்தில் உலகம் முழுதும் மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப துவங்கியதிலிருந்து, அங்கு வன்முறை வெடித்துள்ளது. இது பெரும் கவலையளிக்கிறது," என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.
ஆப்கானிஸ்தான் விவகாரத்திற்கு அமைதிப் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே வழி என்று குறிப்பிட்ட அவர், இதற்கான நடவடிக்கைகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் ஒருதலைப்பட்சமாக மேற்கொள்ளப்படும் ஆற்றலை இந்தியா ஏற்காது என சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் திட்டவட்டமாக வலியுறுத்தியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஷாங்காய் மாநாட்டுக்கு இடையே இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்துப் பேசினர். அப்போது எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சகர்கள் பங்கேற்றனர்.

