புதுடெல்லி: நீதிமன்ற உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் சிலரை பிணையில் விடுவிப்பதில் தாமதம் ஏற்படுத்துவது தவறான போக்கு என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கில் 13 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். 14 முதல் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 13 பேருக்கும் பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் கடந்த 8ஆம் தேதி பிணை வழங்கி உத்தரவிட்டது.
எனினும், 13 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை என ஊடகத்தில் செய்திகள் வெளியாகின. இது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
அப்போது பல வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படுத்தப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
"இது தகவல் தொழில்நுட்பக் காலம். இப்போதும் நாம் உத்தரவுகளை ஏந்தி வரும் புறாக்களுக்காக வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிறீர்கள்.
"இந்த மின்னிலக்க உலகில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த பாதுகாப்பாக, நம்பகமாக, விரைவாக அவற்றைப் பரிமாற்றம் செய்யும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பரிசீலித்து வருகிறோம்.
"இந்த திட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் உடனுக்குடன் உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றம், சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் தாமதங்கள் தவிர்க்கப்படும்," என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேலும் தெரிவித்தனர்.

