டெல்லியில் கொரோனா பலி இல்லாத நாள்; ஊரடங்கு தளர்வால் கேரளாவில் சர்ச்சை
பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருவதை அடுத்து அங்கு கல்லூரிகள், திரையரங்குகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
எனினும், இது தொடர்பான சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொற்றுப் பரவல் குறைந்ததை அடுத்து கர்நாடகாவில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திரையரங்குகளில் ஐம்பது விழுக்காடு இருக்கைகளை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெரிய வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும். பெரிய அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த இயலும்.
எதிர்வரும் 26ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் செயல்படலாம். எனினும் இந்த இடங்களில் பணியாற்றுபவர்கள், படிப்பவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் எனும் கட்டாயம் மாணவர்களுக்கு இல்லை. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.
நேற்று முன்தினம் கர்நாடகாவில் 1,869 பேர் பாதிக்கப்பட்டனர். 42 பேர் பலியாகிவிட்டனர்.
கர்நாடகாவில் நேற்று முன்தினம் 1869 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் 42 பேர் பலியாகிவிட்டனர். அங்கு இரவு 10 முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்திய நிலவரம்
இந்தியாவில் நேற்று முன்தினம் 38,164 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அன்றைய தினம் 499 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சு, அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
டெல்லி நிலவரம்
இதற்கிடையே டெல்லியில் நேற்று முன்தினம் கொரோனா கிருமித்தொற்று தொடர்பான மரணச் சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை. அங்கு தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.
முன்பு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைய சில தினங்களாக இரட்டை இலக்கத்திலேயே புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. நேற்று முன்தினம் புதிதாக 51 பேரை கிருமி தொற்றியுள்ளது. எனினும் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. அம்மாநிலத்தில் ஒட்டுமொத்த மரண எண்ணிக்கை 25,027 ஆகும். இந்நிலையில் உயிரிழப்பு இல்லாத நாள் டெல்லிவாசிகளை உற்சாகப்படுத்தி உள்ளது.
கேரள நிலவரம்
கேரளாவில் தொற்றுப் பரவல் இன்னும் கட்டுக்கு வராத நிலையில், பக்ரீத் நிகழ்வையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் விவாதங்களை எழுப்பியுள்ளன.
கடந்த 71 நாட்களாக அம்மாநிலத்தில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. எனவே அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது ஆறுதலாக இருப்பதாக ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.
இதே வேளையில், அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
"வட இந்தியாவில் கன்வார் யாத்திரை நடப்பது தவறு எனில், அது பக்ரீத் பொது கொண்டாட்ட நிகழ்வுகளுக்கும் பொருந்தும். கேரளாதான் இப்போது கொரோனா தொற்றுப் பரவலால் நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது," என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
இந்திய மருத்துவச் சங்கமும் கேரள அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடு கொரோனா மூன்றாவது அலையை எதிர்நோக்கியுள்ள வேளையில் ஊரடங்கு தளர்வுகளை அறிவிப்பது சரியான நடவடிக்கை அல்ல என்றும் கேரள அரசு தனது அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கேரளாவில் நேற்று முன்தினம் புதிதாக 13,956 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

