புதுடெல்லி: கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட நான்கு புதிய எம்பிக்களுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதலில் புதிய எம்பிக்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழில் பதவிஏற்றுக்கொண்ட விஜய் வசந்த், 'பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க', 'ராஜீவ் காந்தி வாழ்க' என்று குறிப்பிட்டார்.
மறைந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், பிரதமர் மோடி தமது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள புதிய அமைச்சர்களை அவையில் அறிமுகப்படுத்தினார். அப்போது எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
அமைச்சரவையில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, புதிய அமைச்சர்களில் பலர் விவசாயிகளின் பிள்ளைகள் என்றார்.
எனினும் அவர் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி அதிகரித்ததால், மக்களவை நடவடிக்கைகள் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே மூத்த இந்தி நடிகர் திலீப் குமார், தடகள வீரர் மில்கா சிங் ஆகியோரின் மறைவுக்கு மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் மதியம் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் நேற்று நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வந்தனர்.

