புதுடெல்லி: கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் மொடர்னா தடுப்பூசி மருந்து வழங்கப்பட உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் நேற்று தெரிவித்தார். ஆனால், அந்த மருந்துகள் எப்போது வழங்கப்படும் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை. மத்திய அரசின் அனுமதியைப் பொறுத்து தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, நிதிஆயோக்கின் சுகதார உறுப்பினர் வி.கே. பால் கடந்த வெள்ளிக்கிழமை கூறுகையில் "மொடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசி நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. விரைவில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கும்," எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்தத் தடுப்பூசிகள் எப்போது இந்தியாவிற்கு வழங்கப்படும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "அது சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுவதைப் பொறுத்தது," என கூறியுள்ளார்.
ஏற்கனவே ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசி நிறுவனங்கள், சட்டப் பாதுகாப்பு பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் "அவசரகாலப் பயன்பாட்டுக்காக இந்தியாவில் மொடர்னா தடுப்பூசி இறக்குமதிக்கு இந்தியா அனுமதியளித்துள்ளது," எனத் தெரிவித்தது.
இந்தியாவில் கொவிட்-19க்கு எதிராக, கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகின்றன. ஸ்புட்னிக் 'வி' தடுப்பூசி, இந்தியாவில் இன்னும் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு வரவில்லை.

