புதுடெல்லி: இஸ்ரேலின் 'என்எஸ்ஓ' அமைப்பின் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு செயலி மூலம் பல்வேறு அரசியல் தலைவர்களின் கைத்தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் ஒட்டுக்கேட்டதைக் கண்டித்து டெல்லியில் காங்கிரஸ்காரர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்சைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டு கேட்பைக் கண்டுபிடித்துள்ளன.
"பெகாசஸ் ஒட்டுக் கேட்பு செயலி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். இந்த விவாதத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும்," என்று காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறினார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இதைக் கண்டித்து இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
"பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
"இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
"இந்திய பாதுகாப்புப் படைகள், கேபினெட் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், செய்தியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்களை வெளிநாட்டு உளவு செயலி மூலம் உளவு பார்த்தது என்பது, தேசத்துரோகம் மட்டுமல்ல, தேசப்பாதுகாப்புக்கு மன்னிக்க முடியாத விதிமுறை மீறல்.
அரசியலமைப்புச் சட்டம் காலில்போட்டு மிதிக்கப்பட்டுள்ளது, சட்டத்தின் ஆட்சி கொலை செய்யப்பட்டுள்ளது, பிரதமர், உள்துறை அமைச்சர், இந்த அரசின் பதவிப் பிரமாணம் என்பது பொய்யானது என்பது தெரிந்துவிட்டது," இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்

