புதுடெல்லி: மருத்துவமனைகளில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாதது, தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்ணியமாகக் கையாளாதது, மருத்துவமனைத் தீ விபத்துகள் உள்ளிட்டவை குறித்து உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
கட்டட விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கட்டப்பட்ட மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் அடுக்கு வீடுகளைப் போன்ற மருத்துவமனைகள் குறித்து, உச்ச நீதிமன்றம் தாமாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு தீ விபத்துகள் நடந்தன. அதில் ஏராளமான நோயாளிகள் உயிரிழக்க நேரிட்டது.
இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் வழக்காக எடுத்தது.
நாட்டில் உள்ள மருத்துவமனைகளை வீடுகள் விற்கும் சொத்து நிறுவனங்களாக நாங்கள் பார்ப்பதா அல்லது மனிதர்களுக்குச் சேவை யாற்றும் நிறுவனங்களாகப் பார்ப்பதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
"மனிதர்கள் துயரத்தில் வாடும் போது அதைப் பயன்படுத்தி செழித்து வளர்ந்து மருத்துவமனைகள் பெரிய தொழில் கூடங்களாக மாறியுள்ளன.
"மனித உயிர்களைக் கொடுத்துதான் மருத்துவமனைகளின் வளர்ச்சி என்றால் அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. அதுபோன்ற மருத்துவமனைகளை மூடிவிடலாம்.
"அதற்குப் பதிலாக மாநில அரசுகள் தேவையான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கலாம்.
"அடுக்குமாடிக் கட்டட வீடுகளைப் போன்று நான்கு அறைகளை மட்டுமே வைத்துக்கொண்டு அதை ஒரு மருத்துவமனை என்று கூறுவதை ஏற்கமுடியாது.
"இதுபோன்ற மருத்துவமனைகளில் தீ தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமில்லை. அவ்வாறான பாதுகாப்பு நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை.
"அண்மையில் மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து நடந்தது. அங்கு குணமடைந்த கொரோனா தொற்று நோயாளி ஒருவர், மறு நாள் வீட்டுக்குச் சென்று தன் குடும்பத்தினருடன் ஒன்றுசேர ஆசையுடன் காத்திருந்தார். ஆனால், இந்தத் தீ விபத்தில் அவரும் பலியாக நேர்ந்தது.
"நம் கண்முன்னே இதுபோன்ற சோகச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
"இதற்குக் காரணம், மருத்துவமனைகள் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்காததே.
"தீயைத் தடுப்பதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய குஜராத் மருத்துவமனைகளுக்கு அம்மாநில அரசு 2022ஆம் ஆண்டு வரை கெடு விதித்துள்ளது. அதுவரையிலும் மக்கள் தீ விபத்துகளால் பலியாகிக் கொண்டுதான் இருக்கவேண்டுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
"நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தீ தடுப்பு விதிமுறைகளுடனான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா, அவை ஒழுங்காகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து தணிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கென சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்," என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
இந்த வழக்கை இரு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

