புதுடெல்லி: பறவைக் காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு பறவைக் காய்ச்சல் காரணமாக ஏற்பட்ட முதல் மரணம் இது என்று தெரிகிறது.
கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. ஏவியன் இன்ஃப்ளூயன்சா (Avian Influenza) எனும் பறவைக் காய்ச்சல் காரணமாக மேற்கண்ட மாநிலங்களில் பறவைகள், வாத்துகள், காகங்கள் உயிரிழந்தன.
உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பறவைப் காய்ச்சல் ஓரளவு கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில்தான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 11 வயது சிறுவன் பறவைக் காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் பற்றி தெரிவிக்கப்பட்டது. அந்த சிறு வனுடன் தொடர்பில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் குறைவாக இருப்பதாக மும்பை கால்நடை மருத்துவக் கல்லூரி டாக்டர் ஏ.எஸ். ரனாடே ஜனவரி மாதம் தெரிவித்து இருந்தார். 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் சென்றால் அந்தக் கிருமி உடனடியாக இறந்துவிடும்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் இறைச்சி மற்றும் முட்டை இரண்டும் 100 டிகிரி செல்சியசுக்கும் அதிக சூட்டில் நன்கு சமைக்கப்பட்டு உண்ணப்படுவதால் கோழி மற்றும் முட்டைகளைச் சாப்பிடுவதால் கிருமி பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
உள்நாட்டு கோழி மூலம் பரவும் பறவைக் காய்ச்சல் மனிதர்களைத் தொற்றினால் இருமல், காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தசை வலி மற்றும் உடல்நலக்குறைவு ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த ஆண்டின் முதல் பலி