புதுடெல்லி: இந்தியா ஆகஸ்டு 15ஆம் தேதி தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
அதனை முன்னிட்டு அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்தி வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது.
அந்த நாளில் டெல்லியில் பயங்கரவாதிகள் ஆளில்லா வானூர்தி வழி தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்து உள்ளது.
அதனை அடுத்து புதுடெல்லி உள்ளிட்ட பல இடங்களிலும் போலிஸ் துறை விழிப்பு நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று முதல் ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டம் முடிவடையும் வரை டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது என்று தொல்லியல் துறை வெளியிட்டு உள்ள செய்தி தெரிவித்தது.
காஷ்மீர் மாநிலம் ஜம்மு விமான படைத்தளத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி இரண்டு ஆளில்லா வானூர்திகள் பறந்து வந்து தாக்குதல் நடத்தின. அவற்றில் சிறிய வகை ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளை பொருத்தி இருந்தனர். அது கீழே விழுந்து வெடித்தது. இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
ராணுவ மையத்தில் ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்தியது அதுதான் முதல் தடவை ஆகும். பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் அந்த ஆளில்லா வானூர்திகளை இயக்கி தாக்குதல் நடத்தியதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு பல தடவை காஷ்மீர் பகுதிகளில் மர்மமான முறையில் ஆளில்லா வானூர்திகள் பறந்துள்ளன.
இதனால் இத்தகைய வானூர்தி களைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் மேலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் வானூர்தி மூலம் தாக்குதல் நடத்து வதற்குத் திட்டம் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.