நாடாளுமன்றம் அருகே திரளாகக் கூடினர்; வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்து
புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதி மீண்டும் போராட்டக் களமாக மாறியது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இதனால் கடந்த பல மாதங்களாக டெல்லியில் குவிந்துள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாலையோரம் கூடாரங்கள் அமைத்து தங்கி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே நடைபெற்ற பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.
கொரோனா தொற்றுப் பரவல் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு கடுமையாக இருந்ததால், விவசாயிகள் தரப்பு அமைதி காத்து வந்தது. இந்நிலையில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதை அடுத்து, விவசாயிகள் மீண்டும் போராட்டக் களத்துக்கு வந்துள்ளனர்.
தற்போது டெல்லி சிங்குர் எல்லையில் இருந்து ஜந்தர் மந்தருக்கு போராட்டக் களத்தை மாற்றியுள்ள விவசாயிகள் நேற்று காலை அங்கு போராட்டத்தை தொடங்கினர்.
முன்னதாக நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் அனுமதி கோரியபோது காவல்துறை அனுமதி அளிக்க மறுத்தது. நேற்று காலை ஏராளமான விவசாயிகள் ஜந்தர் மந்தர் பகுதிக்கு பேருந்துகளில் வந்து சேர்ந்தனர். பின்னர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஜந்தர் மந்தர் பகுதியானது நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில்தான் அமைந்துள்ளது. நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளைப் பின்பற்றி விவசாயிகளின் போராட்டமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர், துணை சபாநாயகர், தேநீர் இடைவேளை என நாடாளுமன்ற அமர்வின் விதிகளே ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பின்பற்றப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மழைக்கால கூட்டத்தொடர் முடியும் வரை தங்களின் போராட்டம் நீடிக்கும் என்றும் திட்டவட்டமாக அறிவித்தனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சி எம்பிக்களும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நேற்று போராட்டம் நடத்தினர்.

