பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக உட்கட்சிப் பூசல் உச்சத்தை எட்டியுள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், வரும் 26ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ள பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தின்போது கட்சித் தலைமைக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என தமது ஆதரவாளர்களுக்கு முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.
முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்க வேண்டும் என கர்நாடக பாஜகவில் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சிலரும் கூட அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக அண்மையில் செய்தி வெளியானது.
இந்நிலையில் டெல்லி சென்ற முதல்வர் எடியூரப்பா, அங்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் தாம் பதவி விலக வேண்டிய அவசியமே எழவில்லை என்றார்.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் பதவி விலகுவது குறித்து எதிர்த்தரப்பினர் வலியுறுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக கட்சித் தலைமைக்கு காட்ட முதல்வர் எடியூரப்பா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தம்மை ஆதரிப்பதாகக் கூறிக்கொண்டு யாரும் பாஜக தலைமைக்கு எதிராக கருத்து தெரிவிக்கக்கூடாது என டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
எனினும் இவ்வாறு பதிவிட்டதன் மூலம் பாஜக தலைமைக்கும் எடியூரப்பாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவது அப்பட்டமாகத் தெரிவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

