புதுடெல்லி: உயிர்வாயுப் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக சில மாநில அரசுகள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதாக பாஜக சாடியுள்ளது.
உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறிவந்த எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தற்போது இவ்விவகாரத்தை வைத்து அரசியல் செய்வதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையின் போது நாட்டில் ஒருவர் கூட உயிர்வாயுப் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் உயிர்வாயு பற்றாக்குறை நிலவியதாக அனைத்துலக ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி உள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு அரசியல் செய்வதாகச் சாடுகிறது பாஜக.
"உயிர்வாயுப் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்று சில மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் நீதிமன்றத்திலேயே தகவல் தெரிவித்தன. ஆனால், இப்போது அந்தத் தகவலை மறைத்து அதே அரசுகள் மாற்றிப் பேசுகின்றன. இக்குறிப்பிட்ட அரசுகள் அளித்த தகவலை வைத்துத்தான் மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசினார்," என்றார் சம்பித் பத்ரா.
இதற்கிடையே மத்திய அரசின் தவறான முடிவு காரணமாக நாட்டில் 5 மில்லியன் பேர் உயிரிழந்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.இதுகுறித்து வெளியான ஓர் ஆய்வு அறிக்கையைச் சுட்டிக்காட்டி உள்ள அவர், அதன் விவரங்களைத் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

