கனமழை, வெள்ளம், நிலச்சரிவு: மகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை 138ஆக உயர்ந்தது
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கனமழையாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் நிலச்சரிவுகளிலும் சிக்கி குறைந்தது 138 பேர் இறந்து விட்டனர்.
கடந்த சில நாள்களாகப் பல மாவட்டங்களில், குறிப்பாக கொங்கன் பகுதியில் இடைவிடாது கொட்டித் தீர்த்த மழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
ராய்காட் மாவட்டம், தலியே கிராமத்தில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 37 பேர் மாண்டு போயினர். சத்தாரா மாவட்டத்தில் வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கு இதுவரை 27 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கோலாப்பூர் மாவட்டத்தில் 40,882 பேர் உட்பட மொத்தம் 89,333 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ராய்காட்டிற்கு நேற்று நேரில் சென்று, நிலைமையைப் பார்வையிட்டார்.
இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தார்க்கு டுவிட்டர் வழியாக ஆறுதல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிராவில் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் பாதிக்கப்பட்டோர்க்குத் தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார். அதுபோல, அதிபர் ராம்நாத் கோவிந்தும் மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியைத் தொலைபேசிவழி தொடர்புகொண்டு, உயிர், உடைமைச் சேதங்களுக்காக வருத்தம் தெரிவித்தார்.
இதற்கிடையே, அண்டை மாநிலமான கோவாவிலும் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு ஒருவர் இறந்துவிட்டார்; கிட்டத்தட்ட ஆயிரம் வீடுகள் சேதமடைந்துவிட்டன.
தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் நூற்றுக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்திலும் கனமழை காரணமாக மூவர் மாண்டு விட்டனர்.

