மும்பை: தம் கணவர் அப்பாவி என்றும் அவர் ஆபாசக் காணொளிகளைத் தயாரிக்கவில்லை என்றும் நடிகை ஷில்பா ஷெட்டி காவல்துறையினரிடம் சொன்னதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆபாசக் காணொளிகளைத் தயாரித்து, அவற்றைக் கைபேசிச் செயலிகள் மூலம் வெளியிட்ட சந்தேகத்தின்பேரில் ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ரா உட்பட 11 பேரைக் கடந்த வாரம் மும்பை காவல்துறை கைது செய்தது. இதில் குந்த்ராவிற்கு முக்கியப் பங்கு இருப்பதாகத் தோன்றுகிறது என்று மும்பை போலிஸ் ஆணையர் ஹேமந்த் நாக்ராலே தெரிவித்தார்.
இந்நிலையில், இதன் தொடர்பில் ஷில்பாவிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது 'ஹாட்ஷாட்ஸ்' செயலிக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் தம் கணவர் உருவாக்கிய கைபேசிச் செயலியில் இடம்பெற்ற அம்சங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஷில்பா கூறியதாகச் சொல்லப்படுகிறது.
தம் கணவர் அப்பாவி என்றும் ஆபாசக் காணொளித் தயாரிப்பில் தம் கணவர்க்குப் பங்கில்லை என்றும் பாலியல் ஆசையைத் தூண்டும் கிளுகிளுப்பான காணொளியும் ஆபாசக் காணொளியும் வெவ்வேறு என்றும் அவர் கூறினாராம்.
ராஜ் குந்த்ராவின் மைத்துனரான, லண்டனில் இருக்கும் பிரதீப் பக்ஷிதான் அந்தச் செயலிக்கும் அதன் செயல்பாட்டிற்கும் பொறுப்பு என்றும் ஷில்பா கூறினார் என்று அதிகாரிகள் சொன்னதாக 'ஏஎன்ஐ' செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, ராஜ் குந்த்ரா, ரையன் தோர்ப் ஆகியோரின் போலிஸ் காவல் நாளை மறுநாள்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, தாம் கைது செய்யப்பட்டதை எதிர்த்து குந்த்ரா மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.