லக்னோ: துப்பாக்கியுடன் தற்படம் எடுக்க முயன்றபோது தவறுதலாகத் துப்பாக்கியின் விசையை அழுத்திவிட, கழுத்தில் குண்டு பாய்ந்து 26 வயதுப் பெண் மாண்டுபோன சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டத்தில் நிகழ்ந்தது.
உயிரிழந்த ராதிகாவின் (படம்) மாமனாரான ராஜேஷ், அவருக்கும் தம் மகன் ஆகாஷிற்கும் இவ்வாண்டு மே மாதம்தான் திருமணம் நடந்ததாகக் கூறினார்.
உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தல் காரணமாக தம்மிடம் இருந்த துப்பாக்கியை உள்ளூர்க் காவல் நிலையத்தில் தாம் ஒப்படைத்து இருந்ததாக ராஜேஷ் கூறினார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் காவல் நிலையத்திற்குச் சென்று துப்பாக்கியைத் திரும்பப் பெற்றுக்கொண்டு வந்தார் ஆகாஷ்.
மாலை 4 மணியளவில் வீட்டின் மாடியில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, அனைவரும் விரைந்து சென்று பார்க்க, அங்கு ராதிகா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
அருகிலேயே அவர் தற்படம் எடுத்த நிலையிலேயே அவரது கைபேசியும் காணப்பட்டது.
அந்தத் துப்பாக்கியுடன் ஏற்கெனவே புகைப்படம் எடுத்துள்ளபோதும் அதை மீண்டும் காண தம் மனைவி மிகவும் ஆர்வமாக இருந்ததாக ஆகாஷ் குறிப்பிட்டார்.
இதனிடையே, வரதட்சணைக் கொடுமையால் தம் மகள் இறந்திருக்கலாம் எனக் கூறி, ராதிகாவின் தந்தை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால், குண்டு பாய்ந்தது தவிர ராதிகாவின் உடலில் வேறு எந்தக் காயமும் இல்லை என்று உடற்கூராய்வு முடிவுகள் கூறுவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.