புதுடெல்லி: இந்தியா வளர்ச்சியை நோக்கி நடைபோட, அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இயற்கையையும் சுற்றுச்சூழலைப் பாராமரிப்பதும் பேணுவதும் இந்தியர்களின் கலாசாரம் என்றும் அன்றாட வாழ்க்கையிலும் இது அடங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வானொலி மூலம் 'மன் கி பாத்' நிகழ்ச்சி வழி நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
"மழைநீரின் மகத்துவத்தை உணர்ந்து, வானிலிருந்து வரும் ஒவ்வொரு துளி மழைநீரையும் பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கம் நமது பாரம்பரியத்தில் இருக்கிறது. மழைநீர் பாதுகாப்பும் பருவநிலையும் நம்முடைய எண்ணங்களை, தத்துவங்களை, கலாசாரத்தை சீரமைக்கும்," என்றார் மோடி.
அடுத்துவரும் பண்டிகைகளுக்கு இப்போதே தமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக குறிப்பிட்ட அவர், பண்டிகைக் கால கொண்டாட்டத்தின்போது கொரோனா தொற்று நம்மைவிட்டுச் செல்லவில்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்றார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களுக்கு நாட்டு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
"ஒலிம்பிக் தொடக்க விழாவில் நம் வீரர்கள் தேசிய கொடி ஏந்திச் சென்றதைப் பார்த்தபோது நான் மட்டுமல்ல, மொத்த தேசமும் உற்சாகமடைந்தது. ஒட்டுமொத்த தேசமும் ஒன்றாக இணைந்து, வீரர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என வாழ்த்த வேண்டும்.
"ஒலிம்பி்க்கில் இந்தியாவின் வெற்றி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அனைவரும் தங்களின் அபிமான வீரர்களின் வெற்றியைப் பகிர்ந்து இந்தியாவை உற்சாகப்படுத்த வேண்டும்," என்றார் பிரதமர் மோடி.
இன்று கார்கில் போர் நினைவுதினம் அணுசரிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், கார்கில் போர் என்பது இந்திய ராணுவ வீரர்களின் ஒழுக்கம், தியாகம் ஆகியவற்றைக் குறிக்கிறது என்றார்.
"இந்த நாளை இந்தியா அம்ருத் மகோத்சவ் என்று கொண்டாடுகிறது. இந்த நாளில் கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்," என்று பிரதமர் மோடி மேலும் குறிப்பிட்டார்.