ஹைதராபாத்: தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்த குற்றச்சாட்டின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பெண் எம்பி கவிதா மலோத்துக்கு நம்பள்ளி அமர்வு நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இத்தகைய குற்றத்துக்காக தண்டனை பெறும் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மஹபுபாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கவிதா. எனினும் அவர் வாக்காளர்களுக்கு தேர்தலுக்கு முன்பு பணப்பட்டுவாடா செய்ததாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதை அடுத்து வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் கவிதா தமது தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது உறுதியானதாக நீதிமன்றம் அறிவித்தது.
மேலும், கவிதாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பண விநியோகத்தில் கவிதாவுக்கு உதவியாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் அவரது உதவியாளரும் ஆறு மாத சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
எனினும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்கும் பிணை வழங்கியுள்ளார் நீதிபதி.