புதுடெல்லி: நாடு முழுவதும் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது கடந்த மார்ச் மாதம் கொரோனா இரண்டாம் அலை தொடங்கியது முதல் பதிவாகி உள்ள எண்ணிக்கையாகும்.
பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 85 விழுக்காட்டினர் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள் என்றும் இவர்களில் 4,300 பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வளர்ச்சி அடைந்த நாடுகளைவிட சுமார் 80 மடங்கு அதிகம் என்ற போதிலும், இந்தியாவைப் பொறுத்தவரை கறுப்புப் பூஞ்சை நோய் என்பது அரிய வகை பாதிப்பாகவே கருதப்படுகிறது.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தொடங்கிய பிறகே கறுப்புப் பூஞ்சை நோய் குறித்த பேச்சும் விழிப்புணர்வும் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன.
கறுப்புப் பூஞ்சை நோயானது முகத்தில்தான் அதிகமான, நிரந்தரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கண்பார்வையைப் பறிக்கும் இந்நோயால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இந்தியாவில் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்த நோய் நேப்பாளம், ஆப்கானிஸ்தான், எகிப்து, ஓமன் உள்ளிட்ட நாடுகளிலும் சிலரை பாதித்துள்ளதாக அந்நாடுகளின் சுகாதார அமைச்சுகள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் இந்தியாவில் கறுப்புப் பூஞ்சை நோயின் முதல் அலை பரவத் தொடங்கியது.
தற்போதைய நிலவரப்படி, குறைந்த, மத்திய வருவாய் உள்ள நாடுகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றும் அதிகரிக்கும் பட்சத்தில் கறுப்புப் பூஞ்சை நோயின் தாக்கமும் உலகம் முழுவதும் அதிகரிக்கும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னர், இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் மூன்று முதல் நான்காயிரம் பேருக்கு பூஞ்சை நோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டு வந்ததாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா தெரிவித்துள்ளார்.
அச்சமயம் நோய்வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில அரசுகள் உடனடியாக மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும் கடந்த மே மாதம் பாதிப்புகள் அதிகரிக்கவே இதில் மாற்றம் ஏற்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 40,845 ஆக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது, அடுத்த இரு வாரங்களில் ஒன்பது விழுக்காடு அதிகரித்து 45,374 என கூடியது. இவர்களில் சரிபாதிப் பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்கிறது மத்திய சுகாதார அமைச்சு.
கறுப்புப் பூஞ்சை நோயிலிருந்து உடனடியாக விடுபடுவது சாத்தியம் அல்ல. மனித உடலில் பாதிக்கப்பட்டுள்ள திசுக்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதுதான் சிறந்த வழி.
கடந்த மே மாதம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லை எனப் பல்வேறு மாநில அரசுகள் தெரிவித்தன. இதையடுத்து உள்நாட்டிலேயே மருந்துகளைத் தயாரிக்க மத்திய அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் சரிபாதிப் பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்