311 மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் தகவல்
புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் மெல்ல கட்டுக்குள் வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர்.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட அண்மைய ஆய்வின்போது சுமார் 28 விழுக்காட்டினர் எதிர்வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
நாடு தழுவிய அளவில் 311 மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஆயிரம் பேரிடம் பயணங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, விவரங்கள் சேகரகிக்கப்பட்டன. இவர்களில் 68 விழுக்காட்டினர் ஆண்கள் ஆவர்.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனினும், இத்தகைய முன்கணிப்புகளும் எச்சரிக்கைகளும் இந்திய மக்களின் பயண ஆர்வத்துக்குத் தடையாக அமையவில்லை எனத் தெரிகிறது.
பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்களில் ஐந்து விழுக்காட்டினர் ஏற்கெனவே பயணம், தங்குவதற்கான முன்பதிவை உறுதி செய்துள்ளனர்.
இதே வேளையில் இந்த ஆய்வில் பங்கேற்ற 9,146 பேர் (63%) அடுத்த இரு மாதங்களில் எங்கும் பயணம் மேற்கொள்ள திட்டமிடவில்லை என்றும் 9 விழுக்காட்டினர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
"பயணங்களால் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, அவசியமற்ற பயணங்களைக் கைவிடுவது தொடர்பில் மக்கள் மத்தியில் அரசாங்கம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்," என ஆய்வை நடத்திய அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
ஆய்வு முடிவுகளை மத்திய, மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்ளப் போவதாகவும் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிட இத்தகவல்கள் உதவியாக இருக்கும் என நம்புவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
என்ன காரணத்தை முன்னிட்டு பயணங்களை மேற்கொள்கிறார்கள் என்ற கேள்விக்கு, 13 விழுக்காட்டினர் விடுமுறைக்கு ஏற்ற இடத்துக்குச் சென்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்க விரும்புவதாக கூறியுள்ளனர்.
39 விழுக்காட்டினர் உறவினர்கள், நண்பர்களைக் காண விரும்புவதாகவும் 22 விழுக்காட்டினர் பயணங்கள் குறித்து வேறு திட்டங்களை வகுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 39,361 பேருக்கு கிருமி தொற்றி உள்ளது. 416 பேர் தொற்றால் இறந்துவிட்டனர்.