ஸ்ரீநகர்: ஜம்மு, காஷ்மீரில் சிறிய ரக ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிடுவது பாதுகாப்பு படைகளுக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என காவல்துறை தலைவர் தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் முதன் முறையாக இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் பயங்கரவாதிகள் தாக்குல் நடத்தியதாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் இதுவரை 41 முறை ஆளில்லா விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன என்றும் 31 முறை அவற்றை இடைமறித்து தடுத்துள்ளதாகவும் தில்பக் சிங் கூறினார்.
"முதன்முறையாக ஆளில்லா விமான ஊடுருவலைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. எனினும் பிறகு எதிர்நடவடிக்கைகள் எடுப்பதில் திறன் பெற்று விட்டோம்.
"பாகிஸ்தான் அரசுத்தரப்பைச் சேர்ந்த சிலர், பயங்கரவாதிகளின் தேவைகளை நிறைவேற்ற ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள், வெடிபொருள்கள், ரொக்கப் பணம் ஆகியவற்றை அனுப்புகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் எல்லையில் அமைதியைக் கடைப்பிடிக்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அதை மீறுகிறது," என்றார் தில்பக் சிங்.
கடந்த 23ஆம் தேதி, இந்திய படைகளால் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட சிறிய ரக ஆளில்லா விமானத்தில் ஐந்து கிலோ எடைகொண்ட வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. அதை காஷ்மீரின் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வெடிக்கச் செய்து, பலத்த உயிர் இழப்பை ஏற்படுத்த ஜெய்ஷ் இ முகமது திட்டமிட்டு இருந்ததாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.