அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 30,000க்கும் கீழ் பதிவானது
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுப்பரவல் மெல்ல கட்டுக்குள் வரும் நிலையில், கடந்த 132 நாள்களில் இல்லாத வகையில் அன்றாட தொற்று எண்ணிக்கையானது 30 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் புதிதாக 29,689 பேருக்கு கிருமி தொற்றியது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை நாட்டில் 398,100ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையும் கடந்த 124 நாள்களில் பதிவான ஆகக்குறைவானதாகும். சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 400,000க்கும் கீழ் வந்துள்ளது.
இதற்கிடையே கடந்த திங்கட்கிழமையன்று மேலும் 415 பேர் தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 421,382 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 441,912,395 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கேரளாவிலும் மகாராஷ்டிராவிலும் கடுமையாக உள்ளது. கேரளாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு குறையவில்லை.
அங்கு கடந்த திங்கட்கிழமை மேலும் 11,586 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. அன்றைய தினம் 135 பேர் பலியாகிவிட்டனர்.
பத்து மில்லியன் பேருக்கு தடுப்பூசி: சாதித்த மகாராஷ்டிரா
இதற்கிடையே, நாட்டிலேயே முதல் மாநிலமாக சுமார் 10 மில்லியன் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுள்ளது மகாராஷ்டிரா. அங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அம்மாநிலத்தில் திங்கட்கிழமை புதிதாக 6,843 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியது உறுதியானது. 123 பேர் மரணம் அடைந்தனர். மொத்த மரண எண்ணிக்கை 131,552ஆகக் கூடியுள்ளது.
பூஸ்டர் ஊசி தேவைப்படலாம்
உருமாறிய கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மூன்றாவதாக ஒரு பூஸ்டர் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படக்கூடும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.
உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறையும்போது அதனை ஈடுகட்டும் வகையில் மூன்றாவது ஊசி போட்டுக் கொள்வது நல்லது என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் பூஸ்டர் ஊசி போடும் பணிகள் இந்தியாவில் தொடங்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

