ஸ்ரீநகர்: கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மீண்டும் கூடாரங்கள் அமைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள டெம்சோக் பகுதியில் சீன ராணுவத்தின் இந்த அத்துமீறல் நிகழ்ந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
அண்மைய சில மாதங்களாக இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இருதரப்புக்கும் இடையே நிகழ்ந்த சிறிய அளவிலான மோதலில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதுவரை நாடுகளின் அதிகாரிகள் மட்டத்திலான 11 சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளன. எல்லையில் குவித்துள்ள துருப்புக்களை திரும்பப் பெறுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீன ராணுவம் மீண்டும் எல்லைப் பகுதியில் கூடாரங்களை அமைப்பது இந்திய தரப்புக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, டெப்சாங் உள்ளிட்ட பகுதிகள் இருதரப்புக்கும் இடையே மோதலுக்கு வித்திடக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, இப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.
டெம்சோக்கின் சார்டிங் நாலா பகுதியில் சீனர்கள் அமைத்துள்ள கூடாரங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்படும் என மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் அப்பகுதியில் இந்திய ராணுவம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் ஊடகச் செய்தி மேலும் தெரிவித்துள்ளது.

