பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது எடியூரப்பா கண்ணீர் சிந்தியது ஏன்? என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கர்நாடக பாஜக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாக தினத்தந்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மாநில முதல்வர் கண்ணீர் சிந்தும்போது, ஒரு குடிமகனாக அது குறித்து கேட்க தமக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்டுள்ள ராகுல், ஒரு கட்சியின் மூத்த தலைவர் இதுபோன்று கண்ணீர் விடுவது அவரது கட்சியின் மனப்பான்மையைக் காட்டுகிறது என்று விமர்சித்துள்ளார்.
"அந்தக் கட்சியின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும்.
வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றைக் குறிப்பிட்டு பதவி விலகுமாறு எடியூரப்பா மிரட்டப்பட்டிருக்கலாம்.
"உங்கள் பீஷ்மரை அம்புப்படுக்கையில் படுக்க வையுங்கள். வெற்றிகரமாக பதவியை முடிக்க வேண்டியவர்கள், அரசு நிகழ்வில் மேடையில் கண்ணீருடன் விடை பெற்று உள்ளார்," என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மாநில முதல்வர் குறித்து பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை வளர்த்து விடுவதுதான் பாஜக என்ற கட்சியின் ஒழுக்கம் என்று குறிப்பிட்டுள்ள அவர், கர்நாடகாவில் பாஜக ஆட்சியால் சோர்ந்துபோன மக்கள் மொத்த அரசாங்கத்தையும் மாற்றத்தான் விரும்புகிறார்களே தவிர, தலைமை மாற்றத்தை மட்டுமல்ல என்று கூறியுள்ளார்.
பதவி விலகுவதற்குக் காரணம் நிர்வாகத் தோல்வியா?, மன உளைச்சலா? மிரட்டலா? அச்சுறுத்தலா? கீழ்படியாமையா? கண்ணீருடன் பதவி விலக என்ன காரணம் என்பதை எடியூரப்பா மாநில மக்களுக்கு விளக்குவாரா?" என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே, காந்தி குடும்ப அடிமைகளுக்கு ஜனநாயகம் பற்றி பேச தார்மீக உரிமை இல்லை என காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
கட்சியின் சித்தாந்தத்திற்கு உட்பட்டு முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகியுள்ளார் என்றும் காந்தி குடும்ப அடிமைகளின் பேச்சைக் கேட்கும் நிலையில் பாஜக இல்லை என்றும் கர்நாடக பாஜக தெரிவித்துள்ளது.
எடியூரப்பாவுக்கு ஆதரவாக பேசுவது போல காங்கிரசார் முதலைக் கண்ணீர் சிந்துவதாகவும் காங்கிரசார் முதலில் தங்கள் கட்சிக்கு ஒரு தலைவரை நியமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கர்நாடகா பாஜக மேலும் கூறியுள்ளது.

