மும்பை: மகாராஷ்டிராவில் மழை, வெள்ளம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 192ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் சுமார் 800 பாலங்களும் 290 சாலைகளும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
அண்மையில் இரு தினங்களுக்கு இடைவிடாமல் பெய்த மழையால் கொங்கன், மேற்கு மராட்டிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, தானே, பால்கர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறிவிட்டதாகவும் அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள், நிலச்சரிவில் புதைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 192ஆக அதிகரித்துள்ளதை உறுதி செய்த முதல்வர் அலுவலகம், இச்சம்பவங்களில் 56 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வெள்ளப் பாதிப்பு மோசமாக உள்ள பகுதிகளில் இருந்து இதுவரை 229,074 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் சேதமடைந்த பாலங்கள், சாலைகளைச் சீரமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும் என்றும் முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதி அளித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் சுமார் ஒரு மில்லியன் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், அவற்றுள் சுமார் 650,000 இணைப்புகள் உடனடியாக சரிசெய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடும் சேதங்களைச் சந்தித்துள்ள 746 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, தொடர் மழை காரணமாக மகாராஷ்டிர எல்லையை ஒட்டியுள்ள வட கர்நாடக மாவட்டங்களும் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
யாதகிரி, ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடித்து வருவதாகவும் கிருஷ்ணா, வேதகங்கா, துத்கங்கா, சிரண்யகேஷி உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மிதப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

