பிளிங்கன்: இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதே எங்களது முக்கிய கொள்கை
புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியுடன் இருப்பதை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இரு நாடுகளின் உறவானது அனைத்துலக நலனுக்கான சக்தியாகவும் ஜனநாயகப் பண்புகளுக்கான ஆணிவேராகவும் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நேற்று பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பு நல்லவிதமாக அமைந்ததாகவும், இந்தியா-அமெரிக்கா இடையேயான ராணுவ உறவை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ள அதிபர் ஜோ பைடனின் நிலைப்பாட்டை தாம் வரவேற்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றைக் காப்பதில் அமெரிக்க, இந்திய சமூகங்கள் ஆழமான உறுதியைப் பகிர்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் சிறப்பான செயல்பாடுகள் முக்கிய காரணம் என்றார். கொரோனா நெருக்கடி, உலகப் பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவது வருங்காலத்தில் முக்கியத்துவம் பெறும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய வெளியுறவுக் கொள்கையாக உள்ளது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறினார்.
இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து 21ஆம் நூற்றாண்டுக்கு வடிவம் கொடுத்து வருவதாகவும் எனவே இந்தியாவுடனான உறவு அமெரிக்காவுக்கு முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோதே ஆண்டனி பிளிங்கன் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னதாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம், இந்திய-பசிபிக் வட்டாரத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு, கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவது குறித்து அமைச்சர் ஜெய்சங்கருடன் அவர் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதையடுத்து டுவிட்டரில் பதிவிட்ட அவர், இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயகப் பண்புகளுக்கு மதிப்பளிக்கும் நாடுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
"இதுதான் இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் அடித்தளமாகவும் நாட்டின் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் உள்ளது," என்று ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

