சிம்லா: மேகவெடிப்பு காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், லடாக் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 16 பேர் பலியாகிவிட்டனர்.
குறிப்பிட்ட ஓரிடத்தில் ஒருமணி நேரத்தில் நூறு மில்லிமீட்டர் அளவிலான மழை பதிவாகிறது எனில் அதற்கு மேகவெடிப்புதான் காரணம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். நேற்று முன்தினம் இமாச்சலப் பிரதேசத்தில் இவ்வாறு பலத்த மழை பெய்தது.
அங்கு நீடித்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டனர். மூன்று பேரை காணவில்லை. பலியானவர்களில் ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு மீட்புப் பணிகள் நீடித்து வருகின்றன.
காஷ்மீரில் ஏழு பேர் பலியாகிவிட்ட நிலையில், மரண எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் அங்குள்ள கிஷ்த்வார் மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதியான ஹொன்சார் கிராமத்தில் காலை சுமார் 4.30 மணிக்கு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இரண்டு மணி நேரங்களுக்குக் கொட்டித்தீர்த்த மழையால் அப்பகுதியில் உள்ள பாலம் பலத்த சேதமடைந்தது.
இரண்டு பெண்கள் உள்பட ஏழு பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் காணாமல் போன 14 பேர் தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லடாக் பகுதியிலும் கனமழை பெய்தது என்ற போதிலும், அங்கு உயிருடற் சேதங்கள் ஏதும் இல்லை.
அமர்நாத் குகைக்கோவில் அருகே மேகவெடிப்பால் பெரு மழை பெய்தது என்றும் இதனால் கோவிலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

